பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே இந்த அநியாயம் அரங்கேறுகிறது. இவ்வாறு இந்தியக் குடிமக்களை அவமதிப்பதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட அங்கு சென்ற மோடியினால் தெரிவிக்க முடியவில்லை. மாறாக, இவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று மறைமுகமாக இந்த காட்டுமிராண்டித்தனமான நாடு கடத்தலுக்கு ஒப்புதல் வழங்குகிறார் பிரதமர் மோடி.
இந்திய குடிமக்களை இவ்வாறு அநாகரிகமாக நடத்துவதைக் கண்டித்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் ஆனந்த விகடன் இணைய ஏடு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய அரசு ஆனந்தவிகடன் இணையத்தையே முடக்கி தன்னுடைய எதேச்சதிகார போக்கை வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொய்யாக தன்னுடைய பிம்பத்தை ஊதி பெரிதாக்கிக் காட்டுவதில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலான ஊடகங்களை இதற்காக ஒன்றிய அரசு வளைத்துப் போட்டுள்ளது. சமூக ஊடகங்களையும் கூட தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறது. நியூஸ் க்ளிக் ஏடு ஒன்றிய அரசினால் வேட்டையாடப்பட்டது. ஊடக சுதந்திரத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது