ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று 43 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இங்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 என்று 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், அதன்பிறகு நவம்பர் 23ம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.
ஜார்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 30 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி மொத்தம் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே மாலை 5 மணி நிலவரப்படி 64.86% வாக்குகள் பதிவாகியுள்ளன