தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகள் ரமணி (25) எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவரை மதன்குமார் என்பவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தி.மு.க. ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறி உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தி.மு.க. முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.